Saturday 27 June 2015

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.

சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.

புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).

அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.

முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், "யாஹ்வே" அல்லது "எல்" (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.

இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.

முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.

குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.

யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.

கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.

உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.

தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு

விடுதலைப் புலிகள் அமைப்பில், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கருணா குழுவினரின் பிளவு, இறுதி யுத்தத்தில் அதனால் ஏற்பட்ட விளைவுகள், இவற்றை பல தமிழர்கள் விபரமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே மாதிரியான பிளவு, அதே மாதிரியான விளைவுகள், கம்போடியாவில் க்மெர் ரூஜ் இயக்கத்தினுள்ளும் நடந்துள்ளன என்பது அதிசயமல்லவா? சரித்திரம் திரும்புகிறது என்று சொல்வார்கள். ஒரு நாட்டில் நடந்த வரலாற்றுச் சம்பவங்கள், இன்னொரு நாட்டிலும் அதே போன்று நடக்க வாய்ப்புண்டு. இந்தக் காரணத்தால், நாங்கள் உலகின் பிற நாடுகளில் நடந்தவற்றையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. "இன்னொரு நாட்டு மக்களின் பிரச்சினை எமக்குத் தேவையில்லை" என்ற மனநிலையில் பலர் இருக்கின்றனர். படித்தவர்களிடமும் காணப்படும் அத்தகைய  அறியாமை, சில நேரம் முழு சமூகத்தினதும் பின்னடைவுக்கு காரணமாகின்றது. ஆயிரம் மைல்களுக்கு அப்பால், கம்போடியா என்ற நாட்டில் நடந்த சரித்திர சம்பவங்கள், எமது நாட்டிலும் நடக்கலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஆனால், அது நடக்கிறது. 


க்மெர் ரூஜின் வீழ்ச்சிக்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கம்போடியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான பகையை புரிந்து கொள்வது அவசியம். க்மெர் மொழி பேசும் கம்போடிய மக்களுக்கு, தாய்லாந்து, வியட்நாம் இரண்டுமே பரம்பரை எதிரிகள் தான். பண்டைய கம்போடியாவின் மூன்றில் ஒரு பகுதியை, இவ்விரண்டு நாடுகளும் ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், இன்றைய க்மெர் மக்கள், தாய் (லாந்து) மக்களிடம் அதிகளவு வெறுப்பைக் காட்டுவதில்லை. ஆனால், வியட்நாமியர் மேல் அளவுகடந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர். சில நேரம், தாய் மக்களுக்கும், க்மெர் மக்களுக்கும் இடையிலான மொழி, கலாச்சார ஒற்றுமைகள் இனக் குரோதத்தை ஓரளவு தணித்திருக்கலாம். இப்பொழுதும், கம்போடியாவில் தாய்லாந்து திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் இரசிகர் பட்டாளம் இருக்கின்றது. ஆனால், வியட்நாமியர்கள் முற்றிலும் வேறுபட்ட மொழி பேசுவதும், வித்தியாசமான கலாச்சாரத்தை பேணுவதும், இனக்குரோதம் வளர்வதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஹிந்தி மொழி பேசும் வட நாட்டவருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாடு போன்றது என்று வைத்துக் கொள்வோம். 

பொல் பொட், மற்றும் க்மெர் ரூஜ் தலைவர்கள், வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டு, தனியாக இயங்கத் தொடங்கியதை ஏற்கனவே பார்த்தோம். 1975 ல், க்மெர் ரூஜ் ஆட்சிக்கு வந்த பின்னர், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆயுதப்போராட்டம் நடந்த காலங்களில், இரு நாடுகளுக்கும் உதவிய சீனா மத்தியஸ்தம் வகித்தது. ஆனால், சர்வதேச சமூகத்தில் நடந்த மாற்றங்கள், சீனா-வியட்நாம்-கம்போடியா என்ற முக்கூட்டு உறவை பெரிதும் பாதித்தது. ஸ்டாலினுக்குப் பின்னர், சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இரண்டுமே போருக்குத் தயாரான பகை நாடுகள் போன்று காணப்பட்டன. சோவியத் யூனியன் ஒரு சமூக-ஏகாதிபத்தியம் என்று கூறி வந்த சீனா, அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது. அதே நேரம், வியட்நாம் சோவியத் யூனியனுடன் நெருக்கமானது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பொதுவான எல்லையில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. இதனால், சீனா கம்போடியாவை நிபந்தனை இன்றி ஆதரிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

வியட்நாமுடன் மோதல் நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர், சர்வதேச நண்பர்களை தேட வேண்டும் என்று, சீனா க்மெர் ரூஜ் அரசுக்கு அறிவுரை கூறியது. அதன் பிறகு தான், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் கம்போடியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப் பட்டனர். இந்தோனேசிய, தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு கம்போடியாவில் அடைக்கலமும், இராணுவ பயிற்சியும் வழங்கப் பட்டன. இவற்றின் மூலம், க்மெர் ரூஜுக்கு ஓரளவு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.  அதை எல்லாம், க்மெர் ரூஜ் சமாதான வழியில் செல்வதற்கான சமிக்ஞையாக வியட்நாம் புரிந்து கொண்டது. ஆனால், க்மெர் ரூஜ் தலைமை, வியட்நாமுடனான பகை முரண்பாட்டை நீறு பூத்த நெருப்பாக வைத்திருந்த விடயம், காலம் தாழ்த்தித் தான் தெரிய வந்தது. விரைவில், கம்போடியாவில் ஒரு சகோதர யுத்தம் நடக்கப் போகின்றது என்பதை அன்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

1976 ம் ஆண்டு, வட பகுதியில் உள்ள சியாம் ரீப் நகரில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. சிலர் கொல்லப்பட்டனர், கட்டிடங்கள் சேதமுற்றன. அந்த அசம்பாவிதம் குறித்து இரண்டு வகையான தகவல்கள் தெரிவிக்கப் பட்டன. அமெரிக்க விமானங்கள் குண்டுவீசியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், இயக்கத்திற்குள் தலைமையுடன் முரண்பட்ட குழுவினரின் கிளர்ச்சி நடப்பதாக, வெளிநாடுகளில் க்மெர் ரூஜ் எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். வெளியார் யாரும் நுழைய முடியாத, க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடப்பது எதுவும் வெளியே தெரிய வருவதில்லை. இதனால், வதந்திகள் பரவுவதையும் தடுக்க முடியாது. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்  பிரதேசத்திற்குள் கிளர்ச்சிகள் நடந்ததாக, வெளிநாடுகளில் வாழ்ந்த புலி எதிர்ப்பாளர்கள் வதந்திகளை பரப்பி வந்தமை இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது. வன்னியில் புலிகளின் நிலைகளை, சிறிலங்கா வான்படை விமானங்கள் தாக்கிய சம்பவங்கள் காரணமாக, இயக்கத்தில் பொறுப்பாக இருந்தவர்களும் சந்தேகிக்கப் பட்டதை மறுக்க முடியாது. 

குறிப்பாக, புலிகள் இயக்க பிரதித் தலைவர் மாத்தையாவின் துயரமான முடிவு, பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. கிட்டுவின் ஆயுதக்கப்பல் பிடிபட்ட சம்பவத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில், பிரதித் தலைவர் மாத்தையா கைது செய்யப் பட்டிருந்தார். நீண்ட காலமாக, பிரத்தியேகமான சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார். மாத்தையா ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, விசேட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். அதே மாதிரியான சம்பவங்கள், அன்றைய கம்போடியாவினுள்ளும் நடந்து கொண்டிருந்தன. சியாம் ரீப் குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில், வட பிராந்திய தளபதியும், வர்த்தக அமைச்சருமான துவோன் கைது செய்யப்பட்டார். 

புலிகள், மாத்தையா விவகாரத்தை, இயக்க உறுப்பினர்களுக்கே தெரிவிக்காமல் இரகசியமாக வைத்திருந்ததைப் போல, துவோன் கைது விவகாரமும் வெளியிடப்படவில்லை. வட பிராந்தியத் தளபதியாக வேறொருவர் நியமிக்கப்பட்டார். துவோன் கைதுக்குப் பின்னர், அவரின் விசுவாசிகள் கலகம் செய்யலாம் என்று, தலைமை அஞ்சியது. வட பிராந்தியத்தில் துவோன் விசுவாசிகள் என்று கருதப்பட்டவர்களின், ஆயுதங்கள் களையப்பட்டு, விசேட சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டனர். அவர்களின் இடத்தை, புதிய போராளிகள் நிரப்பினார்கள். ஈழத்தில் மாத்தையாவுக்கும், மாத்தையா விசுவாசிகளுக்கும் என்ன நடந்ததோ, அது கம்போடியாவில் துவோனுக்கும், துவோன் விசுவாசிகளுக்கும் நடந்தது. கதை ஒன்று, நாடுகள் தான் வேறு வேறு.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், கிழக்குப் பிராந்திய ஜெனரல் ஒருவரும், அவரது விசுவாசிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களும் விசேட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும், க்மெர் ரூஜ் இயக்கத் தலைவர்கள், போராளிகளாக இருந்தனர். அவர்களை எல்லாம் விசாரிப்பதற்கென தனியாக உருவாக்கப்பட்ட சிறைக்கு S -21 என்று பெயரிடப் பட்டது. ப்னோம் பெண் நகருக்கு தெற்கில் உள்ள,  துவோல் ஸ்லேங் என்ற இடத்தில் பயன்பாட்டில் இல்லாத பாடசாலை ஒன்று இதற்கென ஒதுக்கப்பட்டது. 

பாதுகாப்பு அமைச்சர் சொன் சென்னின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்த தடுப்பு முகாம் இயங்கியது. அங்கே கொண்டு செல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்திரவதைக்கு ஆளானார்கள். சித்திரவதையின் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்கள், வேறிடத்திற்கு கொண்டு சென்று சுட்டுக் கொல்லப்பட்டனர். 1979 ம் ஆண்டு, கம்போடியா மீது படையெடுத்த வியட்நாமிய  இராணுவம், அந்த சிறை முகாமை, க்மெர் ரூஜ் கால கொடுமைகளைக் காட்டும் அருங்காட்சியகமாக மாற்றி விட்டது. இன்று கம்போடியா செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த இடத்தை சென்று பார்க்கத் தவறுவதில்லை. இன்றைக்கும் மேற்கத்திய நாடுகளில், "S -21 சித்திரவதைக் கூடம்" பற்றிய ஆவணப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.  

1976 ம் ஆண்டின் இறுதியில், சித்திரவதை முகாமில் வைத்து, சுக், நே சரண், சாக்ரி, கியோ மியஸ் போன்ற முக்கிய தலைவர்களும், நூற்றுக் கணக்கான முன்னாள் போராளிகளும், சதியில் ஈடுபட்டதகாக ஒத்துக் கொண்டனர்.  வியட்நாம் புலனாய்வுத் துறையின் உத்தரவின் படி, "கம்போடிய தொழிலாளர் கட்சி" என்ற புதிய கட்சியை உருவாக்குவதற்கு முயன்றதாக, பொல் பொட்டை கொலை செய்ய முயன்றதாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, வெளியில் யாராலும் ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. 

அதே நேரம், சித்திரவதையால் பெறப்பட்ட வாக்குமூலங்களை நம்பும் அளவிற்கு பொல் பொட் முட்டாளுமல்ல.  "குற்றம் சாட்டப்பட்டவர்கள், வியட்நாமுடன் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்று கருதிய மிதவாதிகள். அப்படியான மிதவாதப் போக்கு கூட பொல் பொட்டை பொறுத்த வரையில் துரோகம்." என்று பெரும்பாலான கம்போடிய மக்கள் நம்புகின்றனர். ஈழப் போராட்டத்திலும் அதே மாதிரியான கதைகளை கேள்விப் பட்டிருப்போம். "புதிய கட்சி (விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி) ஒன்றை நடத்திய மிதவாதப் போக்கிற்காகவும்,  இந்திய புலனாய்வுத் துறையான ரோ வின் உத்தரவின் படி, பிரபாகரனை கொல்லத் திட்டமிட்டதற்காகவும்," மாத்தையா மீது புலிகள் இயக்கத்தினுள் நடவடிக்கை எடுக்கப் பட்டதாக கூறப் படுகின்றது. 

தமிழர்களுக்கும், க்மெர்களுக்கும் பொதுவான பழைமைவாதக் கலாச்சாரம் ஒன்றுண்டு. ஒருவர் கொல்லப்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பழிவாங்கக் காத்திருப்பார்கள். இதனால், மாறி மாறி, சம்பந்தப் பட்ட குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப் படுவார்கள்.  பழிக்குப் பழி வாங்குவதற்காக, முழுக் குடும்பத்தையும் அழிக்கும் நாயகர்களை, வில்லன்களை எத்தனை தமிழ் சினிமாப் படங்களில் பார்த்திருப்பீர்கள்?   குழந்தை வளர்ந்து பெரியவனாகி பழிவாங்கி விடும் என்று, அதனையும் கொல்வார்கள். க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்திலும், அதெல்லாம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. 

சி.ஐ.ஏ.,கே.ஜி.பி.,வியட்நாமுக்காக உளவு பார்த்த குற்றச் சாட்டில், ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதே நேரம், அவர்களது பெற்றோர், சகோதரர்கள், மாமன், மச்சான், அவர்களது பிள்ளைகள் எல்லோரும் கொல்லப் பட்டனர். ஒரு குடும்ப உறுப்பினரை உயிரோடு விட்டு வைத்தால் கூட, அவன் நாளைக்கு பழிவாங்க வருவான் என்பது க்மெர் மக்களின் நம்பிக்கை. இலங்கையில், ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் அது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கேள்விப் படுகின்றோம். படையினர், ஜேவிபி உறுப்பினரின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த கதைகளும், பழிக்குப்பழியாக படையினரின் குடும்பங்களை ஜேவிபியினர் அழித்த கதைகளும், தென்னிலங்கையில் மலிந்து கிடக்கின்றன. 

1977 ம் ஆண்டு, துரோகிகள், சதிகாரர்கள் அனைவரையும் வெற்றிகரமாக களையெடுத்து விட்டதாக பொல் பொட் அறிவித்தார்.  புலிகளின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும், க்மெர் ரூஜின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும் இடையில் சில வித்தியாசங்களும் இருந்தன. புலிகள் இயக்கத்தை தவிர்ந்த, மாற்று இயக்க சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத பொழுது மட்டும், அவர்களது குடும்ப உறுப்பினர்களை சிறைப் பிடித்து வைத்திருந்தனர். ஒரு சிலர் பழிவாங்கப் பட்டனர். ஆனால், அவை எல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே. பல உறவினர்கள், தாமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். பலர் வெளிநாடுகளுக்கும், அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் சென்றனர். 

கம்போடியாவிலும், க்மெர் ரூஜினால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், வியட்நாமுக்கு தப்பி ஓடினார்கள். க்மெர் ரூஜ் காரர்கள்,  உளவாளிகளை களையெடுக்கும் விஷயம், அப்பொழுது தான் வியட்நாமுக்கு தெரிந்தது. ஆனால், வியட்நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அதை சாட்டாக வைத்து கம்போடியா மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியது. சோவியத் யூனியனுடன் இராணுவ ஒப்பந்தம் போட்டது.  ஆனால், 1978 வரையில் வியட்நாம் படையெடுப்பு பற்றி யோசித்திருக்கவில்லை. அநேகமாக, க்மெர் ரூஜ் இயக்கத்தினுள் ஒரு பெரும் உடைவை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கலாம். அந்தக் காலமும் வந்தது. 

புலிகள் மாத்தையாவை கைது செய்த உடனேயே, வன்னியை சேர்ந்த மாத்தையா விசுவாசிகளையும் இலகுவாக அடக்க முடிந்தது. ஆனால், கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிளவை, அத்தனை இலகுவாக கையாள முடியவில்லை. கருணாவுக்கு எதிராக, கருணாவுக்கு கீழே கட்டுப்பட வேண்டிய கமாண்டர்களின் அணிகள் அனுப்பப் பட்டன. அவர்கள் கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்த போதிலும், கருணாவும், அவரது விசுவாசிகளும் சிறிலங்கா அரசிடம் தஞ்சம் புகுந்தனர். சிறிலங்கா படையினருடன் சேர்ந்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான படையெடுப்புகளில் பங்கெடுத்திருந்தனர். இது இவ்வளவும், கம்போடியாவிலும் நடந்துள்ளது! 

வியட்நாம் எல்லையோரமாக உள்ள கிழக்குப் பிராந்தியத் தளபதியின் பெயர் சோ பிம். மத்திய பகுதி கமாண்டர் கே பவுக், அவருக்கு கீழ்ப்படிய வேண்டிய கமாண்டர். "சோ பிம் துரோகியாகி, வியட்நாமின் கைக்கூலியாக செயற்படுவதாக", பொல் பொட்டுக்கு தகவல் கிடைத்தது. பொல் பொட்டின் உத்தரவின் பெயரில், கே பவுக்கிற்கு விசுவாசமான படையணிகள், கிழக்குப் பிராந்தியத்தை முற்றுகையிட்டன. சோ பிம்முக்கு விசுவாசமான நூற்றுக் கணக்கான போராளிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து, அவர்களது ஆயுதங்களை பறித்தார்கள். அந்தப் போராளிகள் அனைவரும், S -21 முகாமுக்கு அனுப்பப் பட்டு, பின்னர் கொல்லப் பட்டனர்.  அப்பொழுதும் சோ பிம், பொல் பொட் மீது நம்பிக்கை வைத்திருந்தார். பொல் பொட்டிடம் பேசுவதற்கென்று சென்ற வழியில், இன்னொரு படையணியால் வழிமறிக்கப் பட்டு கொல்லப் பட்டார். 

இருந்தாலும், கே பவுக்கின் படைகள், கிழக்குப் பிராந்தியத்தை அவ்வளவு இலகுவாக கட்டுப்படுத்த முடியவில்லை. கிழக்குப் பிராந்திய போராளிகள், க்மெர் ரூஜ் தலைமைக்கு கட்டுப் பட மறுத்தனர். ப்னோம் பென்னில் இருந்து அனுப்பப் பட்ட படைகளுக்கு எதிராக, சிறிது காலம் மறைந்திருந்து தாக்கினார்கள். ஆனால், விரைவிலேயே தமது பக்க பலவீனத்தை  உணர்ந்து, வியட்நாமுக்கு தப்பியோடினார்கள். வியட்நாமிடம் தஞ்சம் கோரிய முன்னாள் க்மெர் ரூஜ் போராளிகளை வைத்து, வியட்நாம் தனது நலன்களை பாதுகாக்கும் ஒட்டுக்குழுக்களை உருவாக்கியது. 1979 ம் ஆண்டு, வியட்நாமிய இராணுவம் படையெடுத்த பொழுது, க்மெர்  துணைப்படைகளும் சேர்ந்து கொண்டன.

வியட்நாமிய படையெடுப்பை எதிர்கொள்ள முடியாத க்மெர் ரூஜ் இயக்கம், காடுகளுக்குள் பதுங்கியது. அன்றைக்கு, துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு க்மெர் ரூஜில் இருந்து வெளியேற்றி, எதிரியிடம் சரணடைந்தவர்கள், இன்று கம்போடியாவை ஆட்சி செய்கின்றனர். அந்த "இனத் துரோகிகளை", இன்று உலகம் "ஜனநாயகவாதிகள்" என்று புகழ்கின்றது. கடைசி வரை, கம்போடிய மண்ணை விட்டுக் கொடாமல் போராடிய க்மெர் ரூஜ் போராளிகளை, இன்று உலகம் "இனப் படுகொலையாளர்கள்" என்று தூற்றுகின்றது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக கம்போடியா மீது படையெடுத்து, இலட்சக் கணக்கான மக்களை படுகொலை செய்த வியட்நாமிய படையினரை, இன்று உலகம் "விடுதலை வீரர்கள்" என்று போற்றுகின்றது. இருபது வருடங்களில், உலகம் தலைகீழாக மாறி விட்டது!

அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப்

ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற மூன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய நீண்ட கால போரின் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வோ-குயன்-கியாப்.



general-giap-21954-ம் ஆண்டு. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் துணையோடு வியட்நாம் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் 8-வது ஆண்டு. அதிகரித்து வரும் வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, பியன்-தியன்-பு என்ற இடத்தில் தனது படைகளை குவித்து தளம் ஒன்றை உருவாக்க முயன்றன பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகள். அந்தத் தளம் தகர்க்கப்பட முடியாதது, வலுவானது என்று பிரெஞ்சு, அமெரிக்க இராணுவ நிபுணர்கள் உறுதியாக நம்பினார்கள்.


டெட் தாக்குதல்




ஆனால் அந்தத் தளத்தை சுற்றியிருந்த உயரமான மலைகளில் தாக்குதல் ஆயுதங்களை எடுத்துச் சென்ற வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகளை மண்டியிடச் செய்தன. 11,000 பிரெஞ்சுப் படையினர் சிறை பிடிக்கப்பட்டனர். இந்தோ சீனாவில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு சவக் குழி வெட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமை விட்டுக் கொடுக்க தயாராகவில்லை. பிரெஞ்சு படைகள் துரத்தி அடிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு தெற்கு வியட்நாம் அரசுக்கு ஆயுதங்கள் அளித்தும், நேரடியாக அமெரிக்கப் படைகளை அனுப்பியும், வியட்நாம் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தது. உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் யாராலும் எதிர் கொள்ள முடியாத அமெரிக்க அரசை, நெல் வயல்கள் நிறைந்த விவசாய நாடான பலவீனமான இராணுவம் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.

1968-ம் ஆண்டு சயானில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட தெற்கு வியட்நாமில் உள்ள அமெரிக்க தளங்கள் பலவற்றில் ஒரே நேரத்தில் வியட்நாம் மக்கள் இராணுவமும் தெற்கு வியட்நாமின் வியட்காங் போராளிகளும் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப் படைகளின் எதிர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் உயிரிழந்தனர்.

இந்தப் போர் முழுவதிலும் அமெரிக்க ஆயுதங்களால் கொல்லப்பட்ட வியட்நாமியர்களின் எண்ணிக்கை 25 லட்சம், வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 58,000. கொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் உடல் பொதிகளையும், அமெரிக்க இராணுவம் வியட்நாம் மக்கள்  மீது அவிழ்த்து விட்ட ஈவிரக்கமற்ற கொலைகளையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அவர்களது அரசு கட்டியமைத்திருந்த பிம்பங்கள் சரிந்தன. போரை எதிர்த்து நடந்த அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு அடி பணிந்தும், போரில் தோல்வி ஏற்பட்டதாலும் அமெரிக்கா வியட்நாமிலிருந்து விலகிக் கொண்டது. வியட்நாம் ஒரே நாடாக விடுதலை பெற்றது.


இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களின் தலைமை தளகர்த்தராக பணியாற்றிய ஜெனரல் கியாப் 1911-ம் ஆண்டில் வியட்நாமின் விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களால் கைது செய்யப்பட்டார். பிறகு ஹனோய் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டத் துறைகளில் படித்துக் கொண்டே வரலாற்று ஆசிரியராக பணி புரிந்தார். 1939-ம் ஆண்டு ஜப்பான் வியட்நாம் மீது போர் தொடுத்த போது ஹோ-சி-மின் தலைமையிலான இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார்.

அவரது மனைவியும், தந்தையும், சகோதரியும் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு அரசால் சிறையிடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட கொரில்லா போரில் கியாப் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜப்பானிய சரணடைவுக்குப் பிறகு 1946-ம் ஆண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசு அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெற்றன.

ஆனால், வியட்நாம் மக்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் தனது காலனி ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட வந்தது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது படை எடுத்தது.

பிரெஞ்சு படைகளுக்கு எதிரான தியன் பியன் பூ தாக்குதலிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான டெட் தாக்குதலிலும் வியட்நாம் மக்கள் படை எப்படி வெற்றி பெற முடிந்தது?

ஒரு பொருளாதார ரீதியில் பின்தங்கிய, பலவீனமான ராணுவத்தைக் கொண்ட நாட்டு மக்கள் தம்மை ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தினால் வலுப்படுத்தப்பட்ட நவீன இராணுவத்தை எதிர்த்து எப்படி தமது சுதந்திரத்தை மீட்க முடிந்தது?

வியட்நாம் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் கோட்பாட்டை வகுத்து நடைமுறைப்படுத்தி வியட்நாம் மக்களின் விடுதலைப் போரை வழி நடத்தினார் ஜெனரல் கியாப்.

மக்கள் யுத்தம்

யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்.

எதிரியின் இராணுவ, பொருளாதார வலிமைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களை எதிர் கொண்டு தோற்கடிக்க அது போதாது. ஒரு நாட்டின் மக்கள் தமது சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டு போராடும் போது அவர்கள் எப்போதும் வெற்றியடைவது உறுதி.  உலகின் மிகப் பலமான பொருளாதார, இராணுவ சக்தி கூட தமது சர்வதேச உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களின் எதிர்ப்பை தகர்க்க முடியாது.

“அவ்வாறு ஒரு நாட்டின் மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் யுத்தம் இராணுவ, அரசியல், மற்றும் பொருளாதார தளங்களில் நடத்தப்படுகிறது. எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்” என்றார் ஜெனரல் கியாப். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வியட்நாம் மக்களின் போர், நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கியிருந்தது.

“போரில் வெற்றி பெற்றவர்கள் வியட்நாம் மக்கள், அமெரிக்க இராணுவம்  தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்கள் போரை விரும்பவில்லை, அமைதியை விரும்பினார்கள். அமெரிக்க மக்கள் போரை விரும்பினார்களா? இல்லை, அவர்களும் அமைதியை விரும்பினார்கள். எனவே எங்கள் வெற்றி வியட்நாம் மக்களின் வெற்றி, அமெரிக்காவில் அமைதியை விரும்பிய மக்களின் வெற்றி.” என்றார் ஜெனரல் கியாப்.

என்ன விலை கொடுத்தாவது வியட்நாமை ஆக்கிரமிக்கத் துடித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்தான் தோல்வி அடைந்தார்கள்.

உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போராடி மண்டியிடச் செய்த தளபதி ஜெனரல் கியாப்புக்கு சிவப்பு வணக்கங்கள்.

Sunday 21 June 2015

WiFi மூலம் போன்களையும் சார்ஜ் செய்யும் வசதி

வயர்கள் ஏதும் இல்லாமல் WiFi, இணையத்தளம் வழியாக மொபைல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


 
30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி WiFi இண்டர்நெட் மூலம் போன்களை சார்ஜ் செய்யும் ‘power over WiFi’ என்ற நவீன தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
 
இந்த தொழில்நுட்பமானது வழக்கமாக WiFi ரௌட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ பிரிக்வன்ஸி பவரை பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக (usable direct current (DC) power) மாற்றுவதன் மூலம் மொபைல்போனிற்கு சார்ஜ் ஏற்றப்படுகின்றது.
 
ஆனால், தற்போதுள்ள WiFi தொழில்நுட்பத்தை விட இதற்கு சற்று மேம்படுத்தப்பட்ட வன்பொருள் தேவை.
 
ஒரு ரௌட்டலிருந்து எவ்வளவு மின்சாரத்தை வெளியில் எடுக்க முடியும் என்பதை கண்டறிய புதிய மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.
 
இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே கெமராவில் 17 அடி தூர தொலைவில் இருந்து சோதனை செய்து பார்த்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
 
அதிகபட்சமாக 28 அடி தூரத்தில் வெப்பநிலை சென்சார்கள், பேட்டரியை சார்ஜ் செய்வது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில், சார்ஜ் ஏறும் போது WiFi இண்டர்நெட் வேகத்திலும் எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை.
 
இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் வெகுவிரைவில் இந்த தொழில்நுட்பத்தை அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.