Sunday, 12 July 2015

தவறாக மெயில சென்ட் பண்ணிட்டா? கவலை வேண்டாம் ஜிமெயிலில் புதிய சேவை அறிமுகம்

இதுவரை மின்னஞ்சல் சேவை நிறுவனங்களில் இல்லாத ஒரு வசதியை ஜிமெயில் இன்று அறிமுகம் செய்துள்ளது.



அதாவது, ஜிமெயிலில் தவறுதலாக மெயிலை அனுப்பிவிட்ட பிறகு, 30 நொடிக்குள் அதனை ரீ சென்ட் என்னும் ஆப்ஷன் மூலமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை ஒவ்வொருவரும் ஜிமெயில் செட்டிங்கில் சென்று லேப்ஸ் ஆப்ஷனில் அன்டூ சென்ட் என்ற பிரிவில் அன்டூ என்ற சேவையை எனேபல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மாற்றத்தை சேவ் செய்துவிட்டு வரவேண்டும்.

இதன்பிறகு, நீங்கள் ஒவ்வொரு மெயிலையும் அனுப்பிய பிறகு ஒரு ஆப்ஷன் வரும். அதில், அனுப்பிய மெயிலை திரும்பப் பெற வேண்டும் என்றால் அன்சென்ட் என்ற ஆப்ஷனை க்ளிக்கினால் போதும், உங்கள் மெயில் ரிட்டர்ன் வந்து விடும்.

Saturday, 27 June 2015

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.

சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.

புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).

அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.

முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், "யாஹ்வே" அல்லது "எல்" (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.

இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.

முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.

குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.

யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.

கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.

உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.

தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு

விடுதலைப் புலிகள் அமைப்பில், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கருணா குழுவினரின் பிளவு, இறுதி யுத்தத்தில் அதனால் ஏற்பட்ட விளைவுகள், இவற்றை பல தமிழர்கள் விபரமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே மாதிரியான பிளவு, அதே மாதிரியான விளைவுகள், கம்போடியாவில் க்மெர் ரூஜ் இயக்கத்தினுள்ளும் நடந்துள்ளன என்பது அதிசயமல்லவா? சரித்திரம் திரும்புகிறது என்று சொல்வார்கள். ஒரு நாட்டில் நடந்த வரலாற்றுச் சம்பவங்கள், இன்னொரு நாட்டிலும் அதே போன்று நடக்க வாய்ப்புண்டு. இந்தக் காரணத்தால், நாங்கள் உலகின் பிற நாடுகளில் நடந்தவற்றையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. "இன்னொரு நாட்டு மக்களின் பிரச்சினை எமக்குத் தேவையில்லை" என்ற மனநிலையில் பலர் இருக்கின்றனர். படித்தவர்களிடமும் காணப்படும் அத்தகைய  அறியாமை, சில நேரம் முழு சமூகத்தினதும் பின்னடைவுக்கு காரணமாகின்றது. ஆயிரம் மைல்களுக்கு அப்பால், கம்போடியா என்ற நாட்டில் நடந்த சரித்திர சம்பவங்கள், எமது நாட்டிலும் நடக்கலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஆனால், அது நடக்கிறது. 


க்மெர் ரூஜின் வீழ்ச்சிக்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கம்போடியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான பகையை புரிந்து கொள்வது அவசியம். க்மெர் மொழி பேசும் கம்போடிய மக்களுக்கு, தாய்லாந்து, வியட்நாம் இரண்டுமே பரம்பரை எதிரிகள் தான். பண்டைய கம்போடியாவின் மூன்றில் ஒரு பகுதியை, இவ்விரண்டு நாடுகளும் ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், இன்றைய க்மெர் மக்கள், தாய் (லாந்து) மக்களிடம் அதிகளவு வெறுப்பைக் காட்டுவதில்லை. ஆனால், வியட்நாமியர் மேல் அளவுகடந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர். சில நேரம், தாய் மக்களுக்கும், க்மெர் மக்களுக்கும் இடையிலான மொழி, கலாச்சார ஒற்றுமைகள் இனக் குரோதத்தை ஓரளவு தணித்திருக்கலாம். இப்பொழுதும், கம்போடியாவில் தாய்லாந்து திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் இரசிகர் பட்டாளம் இருக்கின்றது. ஆனால், வியட்நாமியர்கள் முற்றிலும் வேறுபட்ட மொழி பேசுவதும், வித்தியாசமான கலாச்சாரத்தை பேணுவதும், இனக்குரோதம் வளர்வதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஹிந்தி மொழி பேசும் வட நாட்டவருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாடு போன்றது என்று வைத்துக் கொள்வோம். 

பொல் பொட், மற்றும் க்மெர் ரூஜ் தலைவர்கள், வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டு, தனியாக இயங்கத் தொடங்கியதை ஏற்கனவே பார்த்தோம். 1975 ல், க்மெர் ரூஜ் ஆட்சிக்கு வந்த பின்னர், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆயுதப்போராட்டம் நடந்த காலங்களில், இரு நாடுகளுக்கும் உதவிய சீனா மத்தியஸ்தம் வகித்தது. ஆனால், சர்வதேச சமூகத்தில் நடந்த மாற்றங்கள், சீனா-வியட்நாம்-கம்போடியா என்ற முக்கூட்டு உறவை பெரிதும் பாதித்தது. ஸ்டாலினுக்குப் பின்னர், சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இரண்டுமே போருக்குத் தயாரான பகை நாடுகள் போன்று காணப்பட்டன. சோவியத் யூனியன் ஒரு சமூக-ஏகாதிபத்தியம் என்று கூறி வந்த சீனா, அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது. அதே நேரம், வியட்நாம் சோவியத் யூனியனுடன் நெருக்கமானது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பொதுவான எல்லையில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. இதனால், சீனா கம்போடியாவை நிபந்தனை இன்றி ஆதரிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

வியட்நாமுடன் மோதல் நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர், சர்வதேச நண்பர்களை தேட வேண்டும் என்று, சீனா க்மெர் ரூஜ் அரசுக்கு அறிவுரை கூறியது. அதன் பிறகு தான், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் கம்போடியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப் பட்டனர். இந்தோனேசிய, தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு கம்போடியாவில் அடைக்கலமும், இராணுவ பயிற்சியும் வழங்கப் பட்டன. இவற்றின் மூலம், க்மெர் ரூஜுக்கு ஓரளவு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.  அதை எல்லாம், க்மெர் ரூஜ் சமாதான வழியில் செல்வதற்கான சமிக்ஞையாக வியட்நாம் புரிந்து கொண்டது. ஆனால், க்மெர் ரூஜ் தலைமை, வியட்நாமுடனான பகை முரண்பாட்டை நீறு பூத்த நெருப்பாக வைத்திருந்த விடயம், காலம் தாழ்த்தித் தான் தெரிய வந்தது. விரைவில், கம்போடியாவில் ஒரு சகோதர யுத்தம் நடக்கப் போகின்றது என்பதை அன்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

1976 ம் ஆண்டு, வட பகுதியில் உள்ள சியாம் ரீப் நகரில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. சிலர் கொல்லப்பட்டனர், கட்டிடங்கள் சேதமுற்றன. அந்த அசம்பாவிதம் குறித்து இரண்டு வகையான தகவல்கள் தெரிவிக்கப் பட்டன. அமெரிக்க விமானங்கள் குண்டுவீசியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், இயக்கத்திற்குள் தலைமையுடன் முரண்பட்ட குழுவினரின் கிளர்ச்சி நடப்பதாக, வெளிநாடுகளில் க்மெர் ரூஜ் எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். வெளியார் யாரும் நுழைய முடியாத, க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடப்பது எதுவும் வெளியே தெரிய வருவதில்லை. இதனால், வதந்திகள் பரவுவதையும் தடுக்க முடியாது. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்  பிரதேசத்திற்குள் கிளர்ச்சிகள் நடந்ததாக, வெளிநாடுகளில் வாழ்ந்த புலி எதிர்ப்பாளர்கள் வதந்திகளை பரப்பி வந்தமை இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது. வன்னியில் புலிகளின் நிலைகளை, சிறிலங்கா வான்படை விமானங்கள் தாக்கிய சம்பவங்கள் காரணமாக, இயக்கத்தில் பொறுப்பாக இருந்தவர்களும் சந்தேகிக்கப் பட்டதை மறுக்க முடியாது. 

குறிப்பாக, புலிகள் இயக்க பிரதித் தலைவர் மாத்தையாவின் துயரமான முடிவு, பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. கிட்டுவின் ஆயுதக்கப்பல் பிடிபட்ட சம்பவத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில், பிரதித் தலைவர் மாத்தையா கைது செய்யப் பட்டிருந்தார். நீண்ட காலமாக, பிரத்தியேகமான சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார். மாத்தையா ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, விசேட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். அதே மாதிரியான சம்பவங்கள், அன்றைய கம்போடியாவினுள்ளும் நடந்து கொண்டிருந்தன. சியாம் ரீப் குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில், வட பிராந்திய தளபதியும், வர்த்தக அமைச்சருமான துவோன் கைது செய்யப்பட்டார். 

புலிகள், மாத்தையா விவகாரத்தை, இயக்க உறுப்பினர்களுக்கே தெரிவிக்காமல் இரகசியமாக வைத்திருந்ததைப் போல, துவோன் கைது விவகாரமும் வெளியிடப்படவில்லை. வட பிராந்தியத் தளபதியாக வேறொருவர் நியமிக்கப்பட்டார். துவோன் கைதுக்குப் பின்னர், அவரின் விசுவாசிகள் கலகம் செய்யலாம் என்று, தலைமை அஞ்சியது. வட பிராந்தியத்தில் துவோன் விசுவாசிகள் என்று கருதப்பட்டவர்களின், ஆயுதங்கள் களையப்பட்டு, விசேட சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டனர். அவர்களின் இடத்தை, புதிய போராளிகள் நிரப்பினார்கள். ஈழத்தில் மாத்தையாவுக்கும், மாத்தையா விசுவாசிகளுக்கும் என்ன நடந்ததோ, அது கம்போடியாவில் துவோனுக்கும், துவோன் விசுவாசிகளுக்கும் நடந்தது. கதை ஒன்று, நாடுகள் தான் வேறு வேறு.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், கிழக்குப் பிராந்திய ஜெனரல் ஒருவரும், அவரது விசுவாசிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களும் விசேட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும், க்மெர் ரூஜ் இயக்கத் தலைவர்கள், போராளிகளாக இருந்தனர். அவர்களை எல்லாம் விசாரிப்பதற்கென தனியாக உருவாக்கப்பட்ட சிறைக்கு S -21 என்று பெயரிடப் பட்டது. ப்னோம் பெண் நகருக்கு தெற்கில் உள்ள,  துவோல் ஸ்லேங் என்ற இடத்தில் பயன்பாட்டில் இல்லாத பாடசாலை ஒன்று இதற்கென ஒதுக்கப்பட்டது. 

பாதுகாப்பு அமைச்சர் சொன் சென்னின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்த தடுப்பு முகாம் இயங்கியது. அங்கே கொண்டு செல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்திரவதைக்கு ஆளானார்கள். சித்திரவதையின் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்கள், வேறிடத்திற்கு கொண்டு சென்று சுட்டுக் கொல்லப்பட்டனர். 1979 ம் ஆண்டு, கம்போடியா மீது படையெடுத்த வியட்நாமிய  இராணுவம், அந்த சிறை முகாமை, க்மெர் ரூஜ் கால கொடுமைகளைக் காட்டும் அருங்காட்சியகமாக மாற்றி விட்டது. இன்று கம்போடியா செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த இடத்தை சென்று பார்க்கத் தவறுவதில்லை. இன்றைக்கும் மேற்கத்திய நாடுகளில், "S -21 சித்திரவதைக் கூடம்" பற்றிய ஆவணப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.  

1976 ம் ஆண்டின் இறுதியில், சித்திரவதை முகாமில் வைத்து, சுக், நே சரண், சாக்ரி, கியோ மியஸ் போன்ற முக்கிய தலைவர்களும், நூற்றுக் கணக்கான முன்னாள் போராளிகளும், சதியில் ஈடுபட்டதகாக ஒத்துக் கொண்டனர்.  வியட்நாம் புலனாய்வுத் துறையின் உத்தரவின் படி, "கம்போடிய தொழிலாளர் கட்சி" என்ற புதிய கட்சியை உருவாக்குவதற்கு முயன்றதாக, பொல் பொட்டை கொலை செய்ய முயன்றதாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, வெளியில் யாராலும் ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. 

அதே நேரம், சித்திரவதையால் பெறப்பட்ட வாக்குமூலங்களை நம்பும் அளவிற்கு பொல் பொட் முட்டாளுமல்ல.  "குற்றம் சாட்டப்பட்டவர்கள், வியட்நாமுடன் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்று கருதிய மிதவாதிகள். அப்படியான மிதவாதப் போக்கு கூட பொல் பொட்டை பொறுத்த வரையில் துரோகம்." என்று பெரும்பாலான கம்போடிய மக்கள் நம்புகின்றனர். ஈழப் போராட்டத்திலும் அதே மாதிரியான கதைகளை கேள்விப் பட்டிருப்போம். "புதிய கட்சி (விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி) ஒன்றை நடத்திய மிதவாதப் போக்கிற்காகவும்,  இந்திய புலனாய்வுத் துறையான ரோ வின் உத்தரவின் படி, பிரபாகரனை கொல்லத் திட்டமிட்டதற்காகவும்," மாத்தையா மீது புலிகள் இயக்கத்தினுள் நடவடிக்கை எடுக்கப் பட்டதாக கூறப் படுகின்றது. 

தமிழர்களுக்கும், க்மெர்களுக்கும் பொதுவான பழைமைவாதக் கலாச்சாரம் ஒன்றுண்டு. ஒருவர் கொல்லப்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பழிவாங்கக் காத்திருப்பார்கள். இதனால், மாறி மாறி, சம்பந்தப் பட்ட குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப் படுவார்கள்.  பழிக்குப் பழி வாங்குவதற்காக, முழுக் குடும்பத்தையும் அழிக்கும் நாயகர்களை, வில்லன்களை எத்தனை தமிழ் சினிமாப் படங்களில் பார்த்திருப்பீர்கள்?   குழந்தை வளர்ந்து பெரியவனாகி பழிவாங்கி விடும் என்று, அதனையும் கொல்வார்கள். க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்திலும், அதெல்லாம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. 

சி.ஐ.ஏ.,கே.ஜி.பி.,வியட்நாமுக்காக உளவு பார்த்த குற்றச் சாட்டில், ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதே நேரம், அவர்களது பெற்றோர், சகோதரர்கள், மாமன், மச்சான், அவர்களது பிள்ளைகள் எல்லோரும் கொல்லப் பட்டனர். ஒரு குடும்ப உறுப்பினரை உயிரோடு விட்டு வைத்தால் கூட, அவன் நாளைக்கு பழிவாங்க வருவான் என்பது க்மெர் மக்களின் நம்பிக்கை. இலங்கையில், ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் அது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கேள்விப் படுகின்றோம். படையினர், ஜேவிபி உறுப்பினரின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த கதைகளும், பழிக்குப்பழியாக படையினரின் குடும்பங்களை ஜேவிபியினர் அழித்த கதைகளும், தென்னிலங்கையில் மலிந்து கிடக்கின்றன. 

1977 ம் ஆண்டு, துரோகிகள், சதிகாரர்கள் அனைவரையும் வெற்றிகரமாக களையெடுத்து விட்டதாக பொல் பொட் அறிவித்தார்.  புலிகளின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும், க்மெர் ரூஜின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும் இடையில் சில வித்தியாசங்களும் இருந்தன. புலிகள் இயக்கத்தை தவிர்ந்த, மாற்று இயக்க சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத பொழுது மட்டும், அவர்களது குடும்ப உறுப்பினர்களை சிறைப் பிடித்து வைத்திருந்தனர். ஒரு சிலர் பழிவாங்கப் பட்டனர். ஆனால், அவை எல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே. பல உறவினர்கள், தாமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். பலர் வெளிநாடுகளுக்கும், அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் சென்றனர். 

கம்போடியாவிலும், க்மெர் ரூஜினால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், வியட்நாமுக்கு தப்பி ஓடினார்கள். க்மெர் ரூஜ் காரர்கள்,  உளவாளிகளை களையெடுக்கும் விஷயம், அப்பொழுது தான் வியட்நாமுக்கு தெரிந்தது. ஆனால், வியட்நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அதை சாட்டாக வைத்து கம்போடியா மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியது. சோவியத் யூனியனுடன் இராணுவ ஒப்பந்தம் போட்டது.  ஆனால், 1978 வரையில் வியட்நாம் படையெடுப்பு பற்றி யோசித்திருக்கவில்லை. அநேகமாக, க்மெர் ரூஜ் இயக்கத்தினுள் ஒரு பெரும் உடைவை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கலாம். அந்தக் காலமும் வந்தது. 

புலிகள் மாத்தையாவை கைது செய்த உடனேயே, வன்னியை சேர்ந்த மாத்தையா விசுவாசிகளையும் இலகுவாக அடக்க முடிந்தது. ஆனால், கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிளவை, அத்தனை இலகுவாக கையாள முடியவில்லை. கருணாவுக்கு எதிராக, கருணாவுக்கு கீழே கட்டுப்பட வேண்டிய கமாண்டர்களின் அணிகள் அனுப்பப் பட்டன. அவர்கள் கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்த போதிலும், கருணாவும், அவரது விசுவாசிகளும் சிறிலங்கா அரசிடம் தஞ்சம் புகுந்தனர். சிறிலங்கா படையினருடன் சேர்ந்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான படையெடுப்புகளில் பங்கெடுத்திருந்தனர். இது இவ்வளவும், கம்போடியாவிலும் நடந்துள்ளது! 

வியட்நாம் எல்லையோரமாக உள்ள கிழக்குப் பிராந்தியத் தளபதியின் பெயர் சோ பிம். மத்திய பகுதி கமாண்டர் கே பவுக், அவருக்கு கீழ்ப்படிய வேண்டிய கமாண்டர். "சோ பிம் துரோகியாகி, வியட்நாமின் கைக்கூலியாக செயற்படுவதாக", பொல் பொட்டுக்கு தகவல் கிடைத்தது. பொல் பொட்டின் உத்தரவின் பெயரில், கே பவுக்கிற்கு விசுவாசமான படையணிகள், கிழக்குப் பிராந்தியத்தை முற்றுகையிட்டன. சோ பிம்முக்கு விசுவாசமான நூற்றுக் கணக்கான போராளிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து, அவர்களது ஆயுதங்களை பறித்தார்கள். அந்தப் போராளிகள் அனைவரும், S -21 முகாமுக்கு அனுப்பப் பட்டு, பின்னர் கொல்லப் பட்டனர்.  அப்பொழுதும் சோ பிம், பொல் பொட் மீது நம்பிக்கை வைத்திருந்தார். பொல் பொட்டிடம் பேசுவதற்கென்று சென்ற வழியில், இன்னொரு படையணியால் வழிமறிக்கப் பட்டு கொல்லப் பட்டார். 

இருந்தாலும், கே பவுக்கின் படைகள், கிழக்குப் பிராந்தியத்தை அவ்வளவு இலகுவாக கட்டுப்படுத்த முடியவில்லை. கிழக்குப் பிராந்திய போராளிகள், க்மெர் ரூஜ் தலைமைக்கு கட்டுப் பட மறுத்தனர். ப்னோம் பென்னில் இருந்து அனுப்பப் பட்ட படைகளுக்கு எதிராக, சிறிது காலம் மறைந்திருந்து தாக்கினார்கள். ஆனால், விரைவிலேயே தமது பக்க பலவீனத்தை  உணர்ந்து, வியட்நாமுக்கு தப்பியோடினார்கள். வியட்நாமிடம் தஞ்சம் கோரிய முன்னாள் க்மெர் ரூஜ் போராளிகளை வைத்து, வியட்நாம் தனது நலன்களை பாதுகாக்கும் ஒட்டுக்குழுக்களை உருவாக்கியது. 1979 ம் ஆண்டு, வியட்நாமிய இராணுவம் படையெடுத்த பொழுது, க்மெர்  துணைப்படைகளும் சேர்ந்து கொண்டன.

வியட்நாமிய படையெடுப்பை எதிர்கொள்ள முடியாத க்மெர் ரூஜ் இயக்கம், காடுகளுக்குள் பதுங்கியது. அன்றைக்கு, துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு க்மெர் ரூஜில் இருந்து வெளியேற்றி, எதிரியிடம் சரணடைந்தவர்கள், இன்று கம்போடியாவை ஆட்சி செய்கின்றனர். அந்த "இனத் துரோகிகளை", இன்று உலகம் "ஜனநாயகவாதிகள்" என்று புகழ்கின்றது. கடைசி வரை, கம்போடிய மண்ணை விட்டுக் கொடாமல் போராடிய க்மெர் ரூஜ் போராளிகளை, இன்று உலகம் "இனப் படுகொலையாளர்கள்" என்று தூற்றுகின்றது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக கம்போடியா மீது படையெடுத்து, இலட்சக் கணக்கான மக்களை படுகொலை செய்த வியட்நாமிய படையினரை, இன்று உலகம் "விடுதலை வீரர்கள்" என்று போற்றுகின்றது. இருபது வருடங்களில், உலகம் தலைகீழாக மாறி விட்டது!

அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப்

ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற மூன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய நீண்ட கால போரின் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வோ-குயன்-கியாப்.



general-giap-21954-ம் ஆண்டு. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் துணையோடு வியட்நாம் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் 8-வது ஆண்டு. அதிகரித்து வரும் வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, பியன்-தியன்-பு என்ற இடத்தில் தனது படைகளை குவித்து தளம் ஒன்றை உருவாக்க முயன்றன பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகள். அந்தத் தளம் தகர்க்கப்பட முடியாதது, வலுவானது என்று பிரெஞ்சு, அமெரிக்க இராணுவ நிபுணர்கள் உறுதியாக நம்பினார்கள்.


டெட் தாக்குதல்




ஆனால் அந்தத் தளத்தை சுற்றியிருந்த உயரமான மலைகளில் தாக்குதல் ஆயுதங்களை எடுத்துச் சென்ற வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகளை மண்டியிடச் செய்தன. 11,000 பிரெஞ்சுப் படையினர் சிறை பிடிக்கப்பட்டனர். இந்தோ சீனாவில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு சவக் குழி வெட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமை விட்டுக் கொடுக்க தயாராகவில்லை. பிரெஞ்சு படைகள் துரத்தி அடிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு தெற்கு வியட்நாம் அரசுக்கு ஆயுதங்கள் அளித்தும், நேரடியாக அமெரிக்கப் படைகளை அனுப்பியும், வியட்நாம் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தது. உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் யாராலும் எதிர் கொள்ள முடியாத அமெரிக்க அரசை, நெல் வயல்கள் நிறைந்த விவசாய நாடான பலவீனமான இராணுவம் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.

1968-ம் ஆண்டு சயானில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட தெற்கு வியட்நாமில் உள்ள அமெரிக்க தளங்கள் பலவற்றில் ஒரே நேரத்தில் வியட்நாம் மக்கள் இராணுவமும் தெற்கு வியட்நாமின் வியட்காங் போராளிகளும் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப் படைகளின் எதிர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் உயிரிழந்தனர்.

இந்தப் போர் முழுவதிலும் அமெரிக்க ஆயுதங்களால் கொல்லப்பட்ட வியட்நாமியர்களின் எண்ணிக்கை 25 லட்சம், வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 58,000. கொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் உடல் பொதிகளையும், அமெரிக்க இராணுவம் வியட்நாம் மக்கள்  மீது அவிழ்த்து விட்ட ஈவிரக்கமற்ற கொலைகளையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அவர்களது அரசு கட்டியமைத்திருந்த பிம்பங்கள் சரிந்தன. போரை எதிர்த்து நடந்த அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு அடி பணிந்தும், போரில் தோல்வி ஏற்பட்டதாலும் அமெரிக்கா வியட்நாமிலிருந்து விலகிக் கொண்டது. வியட்நாம் ஒரே நாடாக விடுதலை பெற்றது.


இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களின் தலைமை தளகர்த்தராக பணியாற்றிய ஜெனரல் கியாப் 1911-ம் ஆண்டில் வியட்நாமின் விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களால் கைது செய்யப்பட்டார். பிறகு ஹனோய் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டத் துறைகளில் படித்துக் கொண்டே வரலாற்று ஆசிரியராக பணி புரிந்தார். 1939-ம் ஆண்டு ஜப்பான் வியட்நாம் மீது போர் தொடுத்த போது ஹோ-சி-மின் தலைமையிலான இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார்.

அவரது மனைவியும், தந்தையும், சகோதரியும் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு அரசால் சிறையிடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட கொரில்லா போரில் கியாப் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜப்பானிய சரணடைவுக்குப் பிறகு 1946-ம் ஆண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசு அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெற்றன.

ஆனால், வியட்நாம் மக்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் தனது காலனி ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட வந்தது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது படை எடுத்தது.

பிரெஞ்சு படைகளுக்கு எதிரான தியன் பியன் பூ தாக்குதலிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான டெட் தாக்குதலிலும் வியட்நாம் மக்கள் படை எப்படி வெற்றி பெற முடிந்தது?

ஒரு பொருளாதார ரீதியில் பின்தங்கிய, பலவீனமான ராணுவத்தைக் கொண்ட நாட்டு மக்கள் தம்மை ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தினால் வலுப்படுத்தப்பட்ட நவீன இராணுவத்தை எதிர்த்து எப்படி தமது சுதந்திரத்தை மீட்க முடிந்தது?

வியட்நாம் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் கோட்பாட்டை வகுத்து நடைமுறைப்படுத்தி வியட்நாம் மக்களின் விடுதலைப் போரை வழி நடத்தினார் ஜெனரல் கியாப்.

மக்கள் யுத்தம்

யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்.

எதிரியின் இராணுவ, பொருளாதார வலிமைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களை எதிர் கொண்டு தோற்கடிக்க அது போதாது. ஒரு நாட்டின் மக்கள் தமது சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டு போராடும் போது அவர்கள் எப்போதும் வெற்றியடைவது உறுதி.  உலகின் மிகப் பலமான பொருளாதார, இராணுவ சக்தி கூட தமது சர்வதேச உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களின் எதிர்ப்பை தகர்க்க முடியாது.

“அவ்வாறு ஒரு நாட்டின் மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் யுத்தம் இராணுவ, அரசியல், மற்றும் பொருளாதார தளங்களில் நடத்தப்படுகிறது. எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்” என்றார் ஜெனரல் கியாப். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வியட்நாம் மக்களின் போர், நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கியிருந்தது.

“போரில் வெற்றி பெற்றவர்கள் வியட்நாம் மக்கள், அமெரிக்க இராணுவம்  தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்கள் போரை விரும்பவில்லை, அமைதியை விரும்பினார்கள். அமெரிக்க மக்கள் போரை விரும்பினார்களா? இல்லை, அவர்களும் அமைதியை விரும்பினார்கள். எனவே எங்கள் வெற்றி வியட்நாம் மக்களின் வெற்றி, அமெரிக்காவில் அமைதியை விரும்பிய மக்களின் வெற்றி.” என்றார் ஜெனரல் கியாப்.

என்ன விலை கொடுத்தாவது வியட்நாமை ஆக்கிரமிக்கத் துடித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்தான் தோல்வி அடைந்தார்கள்.

உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போராடி மண்டியிடச் செய்த தளபதி ஜெனரல் கியாப்புக்கு சிவப்பு வணக்கங்கள்.

Friday, 15 May 2015

சுபாஷ் சந்திர போஸ் சில தகவல்கள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.




நேதாஜி என்றால் தலைவர் என்று பொருள். குவேரா அவர்களை சே என்றழைப்பது போல சுபாஷ் சந்திர போஸை நேதாஜி என்று வடநாட்டவர்கள் அழைக்கிறார்கள்.

போஸ் என்பது வங்காளத்தில் உள்ள பிராமண உட்பிரிவான கயஸ்தா என்ற பிரிவினர் பயன்படுத்தும் பெயராகும்.

இவர் பிறந்த தினம் 1897 ஜனவரி 23.

இவர் இளம் வயதில் எதிலும் பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஆன்மிகபாதையை தேடி அலைந்தார். அப்போது, தன்னை தேச பணியில் அர்ப்பணித்துக்கொள்ளுமாறு வாரணாசி ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக என்று கூறுகிறார்.

இவர் கல்லூரியில் பயிலும் போது ஆங்கில இனவெறி மிக்க ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியரை எதிர்த்து சண்டையிட்டதற்காக இவர் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை துறந்தார்.

ஆங்கில ஆதிக்க ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் போராடியவர் காந்தி. ஆயுதம் ஏந்தி போராடியவர் நேதாஜி. இதற்காகவே, சுதந்திர இந்திய இராணுவம் என்ற மாபெரும் அமைப்ைப ஆரம்பித்து நடத்தியவர் தேதாஜி. இதற்காகவே ஆசாத்ஹிந்த் என்ற வானொலியையும் உருவாக்கினார்.

ஆயுதம் எடுத்து போராட்டம் செய்யக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாய் இருந்ததால், ஜாலியன்வாலா பாக் படுகொலை நடத்திய ஜெனரல் டயரை கொன்ற உத்தம் சிங்கிற்கு ஆட்சேபம் தெரிவித்தார் காந்தி. ஆனால் போஸ், உத்தம் சிங்கைஅவரை பாராட்டினார்.

காந்தி எதிர்த்ததால் அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் விலகினார்.

பின்னர், 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார் நேதாஜி. அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழக தலைவராகபசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர்.

ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி தனது உதவியாளராக்கிக்கொண்டார். 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவம்பர் 29, 1942-ல் அனிதா போஸ் பிறந்தார்.

1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் சிறையில் இருந்து நேதாஜி தப்பிச்சென்றார். 26 ஆம் நாள் நேதாஜி அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும் இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.

நேதாஜி ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்ட பின்னர் தான் அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே ஆங்கிலேய அரசுக்கு தெரிய வந்தது
நேதாஜிக்கு விடுதலை போராட்டத்திற்கு ஜெர்மனி இத்தாலியின் உதவி கிடைக்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதனால் நேதாஜி ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் உதவியை நாடினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களால் சுமார் ஆயரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தனர்.

பர்மாவில் இருந்தபடி தன் படையை இந்தியாவை நோக்கி வந்தார். இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது ஆங்கிலேய படை

இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பது நேதாஜியின் புகழ்பெற்ற சூளுரை.

நேதாஜி தன் சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார். கீதை ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்திற்கு பெரும் தூண்டுதலாக இருந்ததாக கருதினார்.

தன் ராணுவ படையில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கினார்.

நேதாஜியின் கடைசி புகைப்படம் வியட்நாமின் கோ சு மிங் நகரில் எடுக்கப்பட்டதாகும்.

தாய்பெய் நகரில் 18 ஆகஸ்ட் 1945 அன்று நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக ஜப்பான் பத்திரிகை ஆகஸ்ட் 23 ம் நாள் செய்தி வெளியிட்டது. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.

நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன் என்று இந்தியாவில் சாட்சி கூறியவர் ஹபிப்வுர் ரகிமான்.

ஆனாலும் பல தலைவர்கள் நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்றே கூறி வந்தனர். அதில் முக்கிமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

1956 ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை குழுவில் இருவரும், 970 ஜுலை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையமும் நேஜாதி விபத்தில் இறந்தது உண்மை என அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நேதாஜியின் அண்ணன் ஏற்க மறுத்தார்.

1999 ல் வாஜ்பாய் ஆட்சியில், அமைக்கப்பட்ட முகர்ஜி ஆணைய குழு நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது.

உத்திரப் பிரதேசத்தில் வாழ்ந்த துறவி பகவான்ஜி ( 'கும்னமி பாபா' ) என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர். இருவரது கையெழுத்தும் ஒத்துப்போனது.

நேதாஜிக்கு 1992-ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை என்பதால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

நேதாஜியின் இறுது அறிக்கை 15 ஆகஸ்ட் 1945 அன்று வெளயிடப்பட்டது. அதில்
"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"
என்று கூறியிருந்தார்.

யாழ் தீவுகள் உருவான வரலாறு: ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை.

ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப் படுகின்றது. நானும் கடல் அழிவால் இலங்கை தனி தீவாக பிரிந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அது எப்பொழுது நடந்து இருக்கலாம் என்ற ஒரு ஆதார சிறு குறிப்பை உங்கள் முன் வைத்து இந்த கட்டுரையை தொடர்கின்றேன்.

1898 இல் அத்திலாந்து சமுத்திரம் என்ற ஆய்வுநூல் எழுதிய மேலைத்தேச ஆய்வாளர் பெர்டினண்ட் கித்டேல் குறிப்பிட்டுள்ள கருத்தின்படி 11481 ஆண்டுகளுக்கு முன்னம் மிகப்பெரிய கடல் அழிவு வந்தது அந்த கடல் அழிவின் பின்னரே பல நாடுகள் புதிதாக உருவாகியது என்று அவர் கருத்தொன்றை முன்வைத்து சென்று இருக்கின்றார். இதே கருத்தை பேரறிஞர் எலியட் என்பவரும் lost lemuria /லொஸ்ட் லெமுரியா /என்ற நூலில் மேற்கோள் காட்டி இருக்கின்றார். எனவே இரண்டும் சமகாலத்தில் ஏற்பட்ட ஒரே மிக பெரும் கடல் அழிவாக இருக்கலாம்.

அத்திலாந்து சமுத்திரம் எழுதியவரின் கருத்தின்படி எனது கணிப்பு இன்றைக்கு/2013/ ,,,11596 வருடங்களுக்கு முன்னம் அந்த கடல் அழிவு வந்ததாயின் அதுவே இன்றைக்கு சர்சைக்கு உரிய விடயமாக இருக்கும் முற்காலத்தில் இருந்ததாக பல ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தும் இரு பெரும் கண்டங்களான அத்லாந்திக் மற்றும் குமரிகண்ட கடல் அழிவாக கருத இடமுண்டு.

இந்த கடல் அழிவில் இந்த கண்டங்களில் பெரும் பகுதி கடலில் மூழ்கிப்போக உலகில் பல புதிய சிறிய நாடுகள் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறே இலங்கையும் இந்தியாவும் குமரி கண்டத்தில் இருந்து தனியாக பிரிந்தது என்று கருதலாம். அதாவது கி மு 9583 இல் இலங்கையும் இந்தியாவும் குமரிகண்ட பகுதிகளின் அழிவின் பின்னர் பிரிந்தது என்று ஒரு கருத்தை முன்வைக்கலாம்.

இதுவே புராணங்கள் கூறும் ஊழி காலத்தில் ஏற்பட்ட பெரும் கடல் அழிவு என்றும் நாம் கூறலாம். இன்றைய யதார்த்தவாதிகளும் ஆன்மீக கருத்துக்களை எதிர்ப்பவர்களும் புராணங்கள் இதிகாசங்கள் முழுமையான புனைவுகள் என்று கடினமான எதிர்கருத்துக்களை முன்வைக்கும் அதேவேளை நாசா விஞ்ஞானிகளும் மேலைத்தேச ஆய்வாளர்களும் புராணங்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அதில் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

புராண வரலாற்றில் முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் சண்டை நடந்ததாகவும் அதில் மேரு மலையின் சிகரம் வாயுபகவானால் பெயர்க்கபட்டு கடலில் வீசப்பட்டதாகவும் கடலில் வீசப்பட்ட இடத்தில் இலங்கை தோன்றியதாகவும் புராணம் கூறுகின்றது. பெளத்தறிவு ரீதியாக எனது பார்வையில் சிந்தித்து பார்க்கையில் வாயு பகவான் காற்றோடு சம்பந்தப் பட்டவர், ஆதிசேஷன் நாகலோகத்து கடலோடு சம்பந்தப்பட்டவர்.
எனவே காற்றும் கடலும் அகோர தாண்டவம் ஆடி குமரி கண்டத்தில் இருந்த மகாமேரு மலை பெயர்க்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய பகுதியின் மிச்சம் இலங்கையாக இருக்கலாம். மகேந்திர மலை, மணி மலை என்பன மிகப்பெரிய மகாமேரு மலையின் தொடர் மலையின் சிகரங்களாக இருக்கலாம்.

புராணங்கள் கூறும் தென் கைலாயம் என்பதும் இலங்கை தான் என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்று. எனவே இந்த நிகழ்வு நடந்தது ஆய்வாளர்கள் குறிப்பிடும் கூற்றுப்படி எனது /2013/கணிப்பில் இன்றைக்கு கி மு 9583 வருடங்களுக்கு முன் நடந்து இருக்கலாம்.

கி மு 9583 இல் உருவாகி சூரன் ராவணன் ஆண்ட இலங்கையில் சிறு தீவுகள் இருந்ததாக வரலாற்று குறிப்புக்கள் இல்லை. இலங்கையின் வரலாற்றை முதல் முதலில் கந்த புராண வரலாற்றுக் குறிப்பில் தான் அறியப்படுகின்றது. பலர் இவை கற்பனை என்று வாதிட்டாலும், கந்தபுராணத்தை ஆய்வுசெய்து விளக்கவுரைகள் எழுதிய தமிழ் பண்டிதர்கள் அந்த கதையில் பல உண்மைகள் இருப்பதாகவே இதுவரை கருத்து கூறி இருக்கின்றார்கள்.

அந்தவகையில் அவர்கள் கருத்துபடி கந்தபுராண வரலாறு நடந்ததாக கருதப்படும் காலம் அண்ணளவாக, கி மு 9000 ஆக இருக்கலாம் என்று பண்டிதமணி சின்னதம்பி, பண்டிதமணி கணபதிபிள்ளை, பண்டிதர் ஸ்ரீலஸ்ரீ செந்திநாதையர் போன்றவர்கள் தங்கள் வரலாற்று குறிப்புக்களில் கூறி இருக்கின்றார்கள். இலங்கை என்று ஒரு தனிநாடும் முதன் முதலில் கந்தபுராண வரலாறு நடந்ததாக கூறப்படும் காலத்தில் தான் வருகின்றது. சூரன் அரசாண்டதாக கூறப்படும் இலங்கையின் தலை நகராக மகேந்திர மலை தான் குறிப்பிடப்படுகின்றது.

சூரனுடைய மனைவியாக வரும் பதும கோமளை, மணிமலை நாகர்குல இளவரசி என்றே கூறப்படுகின்றது. மணிமலை வடகடலில் மூழ்கிய ஒரு மலையாக வரலாற்றில் கருதப்படுகின்றது அப்படியானால் ஈழத்தில் வட பகுதியை நாகர்கள் ஆண்டார்கள் என்ற கருத்தும் இங்கே முன்வைக்கப் படுகின்றது. ஆனால் இந்த மகேந்திரமலை இன்று இல்லை அது அம்பாந்தோட்டைக்கு கீழ் கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படுகின்றது. மணிமலை என்ற ஒரு மலை இன்றைய கீரிமலை சார்ந்த பிரதேசம் என்று சிலர் கருத்து கூறி இருக்கின்றார்கள்.

உண்மையில் மணிமலையின் எச்சமாக கீரிமலை இருக்கலாம். அதேவேளை இன்றைய நயினாதீவின் தென்கிழக்கு முனையின் உயரமான நிலப்பகுதி பகுதி மலை அடி என்றே காலம் காலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. அதை அண்மித்த காட்டு பகுதி மலையன்காடு என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது. இதையும் ஒரு சிறு குறிப்பாக முன்வைக்கின்றேன்.

அத்தோடு இந்த மலை அடியை அண்மித்த அடுத்த தீவான புங்குடுதீவை கந்தபுராணத்தில் கிரவுஞ்சம் என்ற பெயரில் அழைகின்றார்கள் அதுவும் மலை சம்பந்தபட்ட ஒரு பெயராகும். எனவே மணிமலையும் நீண்டதொரு மலைத் தொடராக நாகநாட்டில் இருந்து இருக்கலாம்.

அடுத்து சங்ககால வரலாறுகளில் யாழ் குடாநாடு மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்று கருத்துக்கள் இருக்கிறது. மணிபல்லவம் என்பதற்கு சங்ககால வியாபாரிகளுக்கு நவமணிகள் கிடைத்த இடம் என்பதும் ஒரு காரண பெயர் என்றும் குறிப்பிடுகின்றார்கள். அதேவேளை மணிமேகலை காப்பியம் சொல்லும் மணிபல்லவம் நயினாதீவு தான் என்பதில் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது. அதை இந்த கட்டுரையில் யாழ் தீவுகள் பிரிந்ததாக நான் முன்வைக்க போகும் கால்பகுதி மேலும் நிரூபிகின்றது.

அதனால் தீவுகள் பிரிந்தபின்னர் எழுந்த இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் நயினாதீவு என்று கொள்ளலாம். ஆனால் நாகதீபம் என்று நாகர்கள் ஆண்ட இடம் ஈழத்தின் வடபகுதி முழுவதையும் குறிக்கும். தீவுகள் பிரிவதற்கு முன்னர் எங்காவது இலக்கியத்தில் மணிபல்லவம் என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு இருந்தால் அந்த முழுமையான வரலாறும் இன்றைய நயினாதீவுக்கு சொந்தமானது அல்ல. ஆனால் தீவுகள் பிரிந்ததாக நான் மேற்கோள் காட்டப்படும் காலத்துக்கு பின்னரான இலக்கியங்களில் தான் அனேகமாக மணிபல்லவம் என்ற சொல் பாவிக்கப்பட்டு இருக்கிறது என்பது இதுவரை அறிந்த குறிப்புகள் மூலம் உறுதியாகின்றது.

island

அதேவேளை இன்னொரு முக்கிய விடயத்தை குறிப்பிட வேண்டும் அதாவது பல்லவர்கள் தென்னிந்தியாவுக்கு குறிப்பாக நான் இங்கு தீவுகள் பிரிந்ததாக முன்வைக்கப் போகும் காலத்தில் தான் சென்றார்கள் என்பதால் இந்த கடல் அழிவால் பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்கள் இன்றைய யாழ் தீவு மக்கள் தான் என்று வரலாறு கூறுவதால் அந்த பல்லவர்கள் தீவு பகுதி மக்களாகவும் கடல் அழிவால் பாதிக்கப்பட்ட யாழ் கரையோர பகுதி மக்களாக இருக்கலாம்.

கந்தபுராண காலத்திற்கு முற்பட்ட காலத்தில் நாகலோகத்தோடு இணைந்த இலங்கையை ஆதிஷேசன், வாசுகி, கார்த்த வீரியார்சுணன் ஆண்ட நாடும் கந்த புராண காலத்தில் , சூரன் மற்றும் அவன் தம்பிமார் , முருகன் ஆண்ட இலங்கையும் , அதற்கு பிற்பட்ட காலத்தில் விஸ்வகர்மா, மயன், சுமாலி, குபேரன், இராவணன், வீடணன் ஆண்ட இலங்கையும், இன்றைய இலங்கையை விட மிக பெரிய நிலப்பரப்பையும் பல்வேறு மலைகளையும், நதிகளையும் கொண்ட இலங்கை என்று சொல்லப்படுகின்றது. இந்திய வடநாட்டில் பாய்ந்தோடும் நதிகள் கூட ஈழ நாடுவரை நீண்டு ஓடி வந்து கலந்ததாக வரலாறுகள் இருக்கிறது.

இலங்கையின் பூகோள அமைப்பையும் சமுத்திரங்களால் தாக்கங்கள் ஏற்படக் கூடிய நிலையில் அமைந்து இருப்பதையும் பின்வந்த கடல்கோள்கள் அவற்றை உறுதிப் படுத்துவதையும் வைத்து அன்றைய இலங்கை மிகபெரியது என்பதை உண்மை என்று நம்பலாம். இந்த வரலாற்றுக் காலங்களிலும் இலங்கையில் வடபகுதியில் இருந்த சிறு தீவுகள் பற்றிய குறிப்புக்கள் எங்கும் இல்லை. அதனால் அந்த காலத்தில் இன்றைய வடபகுதி சப்த தீவுகளும் ஏனைய சிறு தீவுகளும் யாழ்ப்பாண நகரோடு இணைந்து பெரு நகரங்களாக இருந்து இருக்கிறது என்றே கருதப்படுகின்றது .

இதற்கு ஆதாரமாக கந்தபுராணத்தில் சப்த தீவுகளுக்கும் தீவுகள் என்ற பெயர் இல்லாமல் அந்த தீவு இருக்கின்ற இடங்களுக்கு நகரத்துக்கு உரிய சிறப்பு பெயர்களே சூட்டபட்டுள்ளது. அந்தவகையில், இன்றைய வேலணை தீவு சூசை என்றும், புங்குடுதீவு, கிரவுஞ்சம் என்றும், நயினாதீவு சம்பு என்றும், காரைதீவு சாகம் என்றும், நெடும்தீவு புட்கரம் என்றும், அனலை தீவு கோமேதகம் என்றும், எழுவை தீவு இலவு என்றும் கூறப்பட்டு உள்ளது. ஏனைய மண்டைதீவு, கச்சைதீவு பற்றிய இடங்களுக்கு எந்த பெயரும் குறிப்பிடப் படவில்லை.

இன்றைய சப்த தீவுகளும் ஏனைய தீவுகளும் எப்பொழுது எவ்வாறு உருவாகியது என்பதை பற்றி ஆராய்து பார்ப்பதற்கு காலத்துக்கு காலம் வந்ததாக கருதப்படும் கடல்கோள்களின் பாதிப்புகளையும் அதனோடு தொடர்புபட்ட வரலாறுகளில் எமது தீவுகளின் பெயர் தீவாக வருகின்றதா என்பதையும் தொடர்ந்தும் ஆராய்ந்து பார்ப்போம். கி.மு 6087 இல் இன்னொரு மிகப்பெரிய கடல் கோள் ஏற்பட்டதாக கருதப்படுகின்றது இந்த அடல் அழிவில் தான் சூரன், முருகன், ஆதிசேடன், குபேரன், இராவணன் ,,, பின் வீடணன் பரம்பரை ஆண்ட மிகப்பெரிய இலங்கையின் பெரும் பகுதி அழிந்ததாக கருத இடம் உண்டு . இந்த கடல் அழிவில் மகேந்திர மலை, மணி மலை போன்ற மலைகள் அழிந்தும் பல நதிகள் கடலோடு முழுமையாக சங்கமமாகியும் இருக்கலாம். இந்த கடல் அழிவின்போதே குமரி கண்டத்தின் எஞ்சிய இன்றைய பகுதிகளை விட ஏனையவை முழுமையாக கடலில் மூழ்கியதாக கூறப்படுகின்றது.

இந்த கடல் அழிவின் போது யாழ் தீவுகள் யாழில் இருந்து பிரிந்திருக்குமா என்று பல்வேறு வழிகளில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய ஆபத்தான சமுத்திரங்கள் இணைந்து கோர தாண்டவம் ஆடிய மிக பெரும் கடல் அழிவாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். பெரும் மலைகளை கூட பெயர்த்து எடுத்த கடல்அழிவு இந்த அழிவில் சிறுதீவுகள் சார்ந்த இடப்பரப்பு உருவாக்கி இருக்குமா .. என்ற சந்தேகம் எழும் அதேவேளை, அதற்கு பின் வந்த வரலாற்று நிகழ்வுகளிலும் குறிப்புக்களிலும் இந்த தீவுகள் தனித்தனி தனித்துவமான தீவுகளாக வரலாறுகளில் இல்லை .

அதற்கு பின் கி மு 3102 மாசி 17 இல் கலியுகம் ஆரம்பம் என்று வரலாற்றில் வருகின்றது. இதுவே சிந்துவெளி காலத்தில் ஆரம்பம் ஆகவும் கருதப்படுகின்றது. இந்த காலத்தில் தான் துவாரகை புகழ்பெற்று விளங்கிய காலம். 3100 /1900, இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கடல்கோள் வந்ததாகவும் ஆனால் இந்த கடல்கோளில் மொஹெஞ்சதாரோவின் பகுதிகள், மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் பகுதிகள், லோத்தல் என்ற இடத்தின் பகுதிகளே அனேகமாக அழிந்தது. இதைத்தான் சிந்துவெளி கடல்கோள் என்று அழைப்பார்கள். இந்த அழிவின் பொழுது துவாரகை அழிந்து இருக்கலாம். இந்த துவாரகையின் தடயங்களை ஆதாரங்களை இந்திய அரசு தற்பொழுது ஆய்வுசெய்து உறுதிப்படுத்தி உள்ளது. ///அதை சிலர் தவறாக குமரிக்கண்ட ஆய்வு என்று பரப்புரை செய்கின்றார்கள்/// இந்த அழிவின்போது மிகப்பெரிய பூமி அதிர்வும் ஏற்பட்டதால் சரஸ்வதி நதி நிலவெடிப்புக்குள் முழுமையாக அமிழ்ந்துபோனது. ஆனால் இந்த அழிவுகள் மேற்கு இந்திய பகுதிகளையே அதிகம் தாக்கியதாகவும், தென்னிந்தியாவையும் ஈழத்தையும் பெரிதாக பாதிக்கவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அதனால் இந்த கடல் அழிவிலும் ஈழத்தில் வடபகுதி தீவுகள் உருவாக சாத்தியம் இல்லை .

இதே சமகாலத்தில் கி மு 2387 இல் தென்னிந்தியாவையும் ஈழத்தையும் உலுப்பிய இன்னொரு கடல் அழிவு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த கடல் அழிவின் போது தான் தென்மதுரையும் கபாட புரமும் அழிந்ததாக கூறுகின்றார்கள். கபாட புரத்தையும் ஈழத்தையும் இந்து சமுத்திர நீர் பிரித்ததாகவும் சொல்கின்றார்கள். இதில் கபாடபுரம் முழுமையாக அழிந்ததாக கூறப்படுகின்றது. இங்கு இயங்கிய தமிழ் சங்கத்தில் ஈழத்தவர்களும் பங்கு கொண்டார்கள் என்ற கருத்துக்களும் இருக்கிறது, அதனால் ஈழத்துக்கும் கபாடபுரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகின்றது. இந்த கடல் அழிவில் தான் ஈழத்தின் வடபகுதி தீவுகள் யாழில் இருந்து பிரிந்து இருக்குமா என்று சிந்திக்கவே தோன்றுகின்றது. கபாடபுரம் ஈழத்துக்கும் இந்தியாவுக்கும் நடுவில் இருந்து இருக்கலாம். இது இன்னும் பல்வேறுபட்ட ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விடயமாகவே நான் கருதுகின்றேன். வரலாற்று மாணவர்கள் புதிய ஆய்வாளர்கள் இதற்கான தகுந்த நிறுவுதலை ஆதாரங்களை முன்வைத்தால் அந்த கருத்தை ஏற்றுகொள்ளலாம். கபாடபுர தமிழ் சங்கத்தில் ஈழத்தவர்கள் பலர் புலவர்களாய் இருந்து தமிழ் வளர்த்ததாக வரலாறுகள் கூறுகின்றது. கபாடபுரத்தில் சங்கம் வளர்த்த புலவர்கள் எழுதிய பாடல்கள் குறிப்புக்களிலும் அவர்களுக்குப் பின்வந்த கடை சங்க ஆரம்பகால புலவர்கள் குறிப்புக்களிலும் யாழ் வடபகுதி தீவுகள் யாழ்ப்பாணதோடு இணைந்த வரலாற்று குறிப்புக்களையே காணக்கூடியதாக இருக்கிறது.

அடுத்த மிகபெரிய கடல்கோளாக கருதப்படுவது கி மு 200 /300 அளவில் தொண்டமான் இளம்திரையன் சிறுவனாய் ஈழ நாட்டில் இருந்து சோழநாட்டுக்கு புறப்பட்டு சென்ற பொழுது ஏற்பட்டதாக கருதப்படுகின்றது. இந்த கடல் அழிவு தேவநம்பிய தீசன் ஆட்சி இறுதி காலத்தில் நடந்ததாக பல புனைவுகள் அடங்கிய மகாவம்சமும் குறிப்பிடுகின்றது. இந்த கடல் அழிவு பெரும்பாலும் ஈழத்தையே தாக்கியது. இந்த கடல்கோளின் பின்தான் தொண்டமானாறு என்ற பெயர் வந்ததாகவும் வரலாறு இருக்கிறது. இந்த கடல்கோள் யாழை பெரிதும் தாக்கி அதன் பெரும் இடப்பரப்பை கடல் ஆட்கொண்டதாகவும் வரலாறுகள் வருகின்றது. இந்த கடல் அழிவில் புகழ் பெற்று இருந்த துறைமுக நகரமாய் விளங்கிய சம்பு மாநகர் சிதைந்து அதன் துறைமுகம் பெரிதும் அழிவடைந்து தீவாகி மணிபல்லவ தீவு என்ற பெயரானது என்பதையும் முன்வைகின்றேன்.

இந்த கடல்கோளின் பொழுதுதான் ஈழத்து வடபகுதி தீவுகளான வேலணை தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடும்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைதீவு , கச்சை தீவு ஆகிய தீவுகள் பிரிந்து இருக்கலாம் என்பது எனது கருதுகோள். எமது பல வரலாற்று நூலாசிரியர்கள் /சப்த /ஏழுதீவுகள் என்ற கருத்தை கொண்டு இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் ஏழு என்று எழுதியவர்கள் தவறாக எழுதி இருக்க மாட்டார்கள் என்பதால் முதல் ஏழாக பிரிந்து பின்னர் மண்டை தீவு எட்டாவது தனித் தீவாக பிரிந்து இருக்கலாம். கடல் பிரிக்கும் தூர அளவுகளை வைத்து பார்க்கும் பொழுது இது சாத்தியமானது. கச்சை தீவு 1974 வரை இந்தியாவின் இராமநாதபுரம் சேதிபதியின் சொத்தாக இருந்ததால் யாழ்தீவுகள் கணக்கில் வராமல் இருந்து இருக்கலாம். எனவே இன்றும் தீவுகள் ஏழு என்று தொடர்ந்தும் நூல்களில் எழுதுவதை தவிர்த்து கண்முன்னே இருக்கும் மண்டைதீவையும் 1974 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையின் சொத்தாகி இருக்கும் கச்சை தீவையும் சேர்த்து தீவுகள் 9 ஆக எழுத வேண்டும் என்ற கருத்தை எதிர்காலத்துக்கு முன்வைக்கின்றேன். ஊர தீவு , பால தீவு, காக்கைதீவு போன்ற நிர்வாக அலகுகள் இல்லாத மிக சிறு தீவுகளை அண்மையில் உள்ள நிர்வாக கட்டமைப்பு உள்ள தீவுகளோடு இணைத்து கருத்துக்களை எழுதலாம். எனவே இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து அந்த முத்துக்கு புகழ் சேர்க்கும் நவமணிகள் யாழ் தீவுகள் என்று அழைக்கப்படும் நவதீவுகள் என்ற கருத்தை உறுதியாக முன்வைகின்றேன்.

நான் இந்த கட்டுரையில் முன்வைத்து இருக்கும் கருத்துக்களை எதிர்காலத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவி வரலாற்று மாணவர்கள் ஆய்வாளர்கள் உறுதிப் படுத்துவார்கள் ஆனால் அதற்கு நான் தலை வணங்குவேன் என்பதையும் இன்றே எழுதி வைக்கின்றேன். நன்றி வணக்கம்..

Tuesday, 3 March 2015

வேற்று கிரகம் மோதியதில் உருவான நிலா

பூமி உருவாகிவந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

வேற்று கிரகம், planet, moon, நிலா
நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் இரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
 
நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்றுதிரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்துவருகிறது.
 
சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்தபோதும் நிலவு உருவானதற்கு பொருந்திவரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்துவருகிறது.
 
தியா
 
ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் அதற்கு இதுவரை இல்லாமல் இருந்துவந்தது.
அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புரானத்திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள்.
 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வுகளை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான் - அதாவது பூமிப் பாறைகளில் காணப்படும் இரசாயன மூலக்கூறுகளும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்டதாக கருதப்பட்டது.
 
ஆக்ஸிஜன் ஐசடோப்
 
ஆனால் மேலும் நூதனமான ஆய்வுகளை தற்போது நிலவுப் பாறைகளில் மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் இரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரக தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட்பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதென்றும் ஆய்வை வழிநடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார்.
 
பாறைகளில் காணப்படும் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவைகளுக்கிடையில் வித்தியாசங்களை அளந்து டாக்டர் ஹெர்வார்ட்ஸ் இந்த ஆய்வை செய்துள்ளார்.
 
பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவை ஒரு விதமாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறு விதமாகவும் இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆனால் நிலவுப் பாறையில் வேற்று கிரக தோற்றத்தைக் குறிக்கக்கூடிய அந்த வித்தியாசம் மிகக் குறைவாகவே தென்படுகிறது.
 
எனவே வேற்று கிரகம் பூமியின் மீது மோதியதென்ற கோட்பாடு சரியாக இருக்குமா என்று சில விஞ்ஞானிகள் இப்போதும் ஐயம் எழுப்புகின்றனர்.